ஜோகூர் பாரு, ஜூலை 28 - இங்குள்ள தஞ்சோங் செகெந்திங், பத்து பஹாட் கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு சட்டவிரோதமாக நங்கூரமிட்ட எண்ணெய் கப்பலை
மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தடுத்து வைத்தது.
நள்ளிரவு 12.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நங்கூரமிட அனுமதி வழங்கியதற்கான எந்த ஆவணங்களையும் கப்பலின் கேப்டன் சமர்ப்பிக்கத் தவறியதால் அக்கப்பல் தஞ்சோங் செகெந்திகிங்கிலிருந்து தென்மேற்கே சுமார் 12.8 கடல் மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டதாகப் பத்து பஹாட் கடல்சார் மண்டல இயக்குநர் கடல்சார் தளபதி முகமது ஜைனி ஜைனல் தெரிவித்தார்.
பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கப்பல் தற்போது 6,894 மெட்ரிக் டன் எடையுள்ள தார் ஏற்றிக்கொண்டு துபாயிலிருந்து வியட்நாமுக்கு செல்லும் வழியில்
மலாக்காவின் தஞ்சோங் புருவாஸ் துறைமுகத்திற்குள் நுழைந்ததாக அவர் கூறினார்.
கப்பலில் கேப்டன் உட்பட 18 பணியாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது, அவர்கள் அனைவரும் 22 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் ஆவர். இருப்பினும், அவர்களிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசிய கடல்சார் துறையின் தலைமை இயக்குநரின் அனுமதியின்றி நங்கூரமிட்டதற்காக 1952ஆம் ஆண்டு வணிகக் கப்பல் கட்டளைச் சட்டத்தின் 491B(1)(L)வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக முகமது ஜைனி கூறினார்.
கப்பல் உரிமையாளர்கள், கப்பல் இயக்குபவர்கள் மற்றும் கப்பல் கேப்டன்கள் எப்போதும் அனைத்து நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் வலியுறுத்த விரும்புகிறது, சட்டவிரோதமாக நங்கூரமிடும் நடவடிக்கைகளுக்கு எதிராக சமரசம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.


