சண்டகான், ஜூலை 22 - தஞ்சோங் அரு கடற்கரையிலிருந்து 0.8 கடல் மைல் தொலைவில் ஒரு மீன்பிடி படகை நேற்று அதிகாலை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் (மாரிடிம் மலேசியா) அமலாக்க அதிகாரிகள் 830,000 வெள்ளி மதிப்புள்ள டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை அண்டை நாட்டிற்கு கடத்தும் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்ததனர்.
ஏழு பணியாளர்களுடன் கேப்டன் ஒருவர் செலுத்திய அப்படகு அதிகாலை 1.05 மணிக்கு
அண்டை நாட்டின் கடல் எல்லையை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் செல்வது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அது தடுத்து நிறுத்தப்பட்டதாக சண்டகான் கடல்சார் மண்டல இயக்குநர் கடல்சார் கேப்டன் முகமது சுஹைரி ஹுசைன் கூறினார்.
அந்த படகில் சுமார் 50,000 லிட்டர் பெட்ரோல் அடங்கிய 250 நீல பீப்பாய்கள், 3,000 லிட்டர் டீசல் எண்ணெய் அடங்கிய 15 பீப்பாய்கள் மற்றும் பல்வேறு பிராண்டுகளிலான எரிவாயு அடங்கிய 120 சிலிண்டர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 27 முதல் 50 வயதுக்குட்பட்ட படகின் கேப்டன் மற்றும் பணியாளர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை காட்டத் தவறிவிட்டனர்.
அதோடு மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்கான சட்டப்பூர்வ அறிவிப்பு ஆவணங்களையும் அவர்களால் சமர்ப்பிக்க இயலவில்லை.
மேலும் அந்த படகில் பயணிகளாகப் பயணம் செய்த அண்டை நாடுகளைச் சேர்ந்த 16 முதல் 41 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1962 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம், 1952 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் கட்டளைச் சட்டம் மற்றும் 1959/63 ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
கைது நடவடிக்கையானது, கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் இந்த நாட்டின் நீர்நிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று முகமது சுஹைரி கூறினார்








