ஜோகூர் பாரு, ஜூலை 18 - இன்று காலை ஜோகூர் பாருவில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 16 இடைநிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி செல்லும் வழியில் ஜாலான் அப்துல் சமாட் சாலையில் காலை 7 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒந்த விபத்துக்கு மூடப்படாமல் இருந்த ``manhole`` எனப்படும் பாதாள சாக்கடைக் குழியை வேன் மோதியததே காரணம் என நம்பப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் அடங்குவர் என ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு கைவிரல் மற்றும் கை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று அஸ்னான் தாமின் நலம் விசாரித்தார். அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இனி வருங்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அந்த வேன் கவிழ்ந்த சம்பவத்தின் வீடியோவும் புகைப்படங்களும் முன்னதாக வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.








