கூச்சிங், ஜூலை 17- ஜோகூரில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்திற்கு கப்பல் பேட்டரிகளை விநியோகிப்பது தொடர்பான போலி டெண்டர் மோசடியில் சிக்கிய மிரியில் உள்ள ஒரு கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தின் பிரதிநிதிக்கு 117,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டது.
தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் திங்கட்கிழமை இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்ததாக மிரி மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.
பாதிக்கப்பட்ட நபரை 019-2768381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்ட 'பாலன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், உங்கள் நிறுவனத்திற்கு கப்பல் பேட்டரியை விநியோகிக்கும் வாய்ப்பை வழங்குகிறோம் எனக் கூறியுள்ளார்.
தந்திரத்தை உணராத பாதிக்கப்பட்ட நபர் சந்தேகப் பேர்வழி வழங்கிய வங்கிக் கணக்கில் பேட்டரிகள் வாங்குவதற்காக மொத்தம் 117,000 வெள்ளியை செலுத்தியுள்ளார்
என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் நிறுவனத்திடமிருந்து எந்த முன்பதிவுகளையும் பெறப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் தெரிவித்தபோதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்ததாக முகமட் ஃபர்ஹான் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.








