ஷா ஆலம், ஜூலை 16 - ஒழுங்கீன அம்சங்கள் அடங்கிய தன்முனைப்பு பயிற்சியை ஏற்பாடு செய்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு இல்லறவியல் தன்முனைப்புப் பயிற்சியின் நடத்துநர்களான கணவன்-மனைவி உள்பட ஆறு பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்கிய அனைத்து சந்தேக நபர்களையும் விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் அமீரா மஸ்துரா இன்று வழங்கினார்.
26 முதல் 47 வயதுடைய அனைத்து நபர்களும் தண்டனைச் சட்டத்தின் 509 மற்றும் 294வது பிரிவு மற்றும் சிறு குற்றச் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டனர்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த பிறகு, ஷா ஆலம் மாவட்டக் காவல் தலைமையகத்தின் காவல்துறையினரால் அத்தம்பதியினர் கைது செய்யப்பட்டதை ஷா ஆலம் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.
தம்பதியினரைப் பிரதிநிதித்து ஆஜராகும் வழக்கறிஞர் டத்தோ எம் ரெஸா ஹாசனும் இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
தன்முனைப்பு நிகழ்ச்சியின் உள்ளடக்கம் சமூக விதிமுறைகளிலிருந்து விலகிச் செல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டும் அறிக்கைகள் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த இல்லறவியல் தன்முனைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களையும் விசாரணைக்கு உதவுவதற்காக தனது தரப்பு அழைக்கும் என சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கடந்த 14ஆம் தேதி கூறியிருந்தார்.


