ஈப்போ, ஜூலை 15 - லோரி ஒன்றைத் தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் இரு சீன நாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டதோடு காரின் ஓட்டுநரான உள்நாட்டு ஆடவர் காயங்களுக்குள்ளானார்.
இச்சம்பவம் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) 316.9வது கிலோமீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்ததாக தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜோஹாரி யஹ்யா கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தமது துறைக்கு இரவு 10.30 மணிக்கு தகவல் கிடைத்ததாகக் கூறிய அவர், 41 வயதுடைய சோங் ஹாங் மற்றும் யுச்செங் பான் என அடையாளம் காணப்பட்ட அவ்விருவரும் தலையில் பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
டோயோட்டா வியோஸ் காரின் ஓட்டுநரான லாவ் யோங் கெங் (வயது 56) என்பவருக்கு கழுத்து, கால்கள் மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள் மூவரும் கோலாலம்பூரிலிருந்து பினாங்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. சாலையின் வலது தடத்தில் சென்று கொண்டிருந்த அக்கார் முன்னாள் திடீரென தடத்தை மாற்றிய லோரியைத் தவிர்க்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநரைக் கண்டுபிடிக்கவும் விசாரணைக்கு உதவ டேஷ்போர்டு கேமரா காட்சிகளைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஜோஹாரி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் இவ்விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜோஹாரி கூறினார்.








