ஷா ஆலம், ஜூலை 15 - சிப்பாங், தஞ்சோங் தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு கையுறை உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை உலர்த்தும் இயந்திரம் வெடித்ததில் இயந்திர ஆபரேட்டர் ஒருவர் உயிரிழந்தார்.
பிற்பகல் 2.56 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் கையுறைகளை துவைத்து உலர்த்திக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு நபர் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையை மேற்கோள் காட்டி பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் கையுறைகளை சலவை இயந்திரத்தில் போட்டு பின்னர் அவற்றை உலர்த்தும் இயந்திரத்திற்கு மாற்றும் பணியை மேற்கொண்டபோது இந்த விபத்து ஏற்பட்டது.
அப்பணி முடிந்ததும் பாதிக்கப்பட்ட நபர் இயந்திரத்தை ஆய்வு செய்து விட்டு 'தொடங்கு' பட்டனை அழுத்தியவுடன் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த இயந்திரத்தின் கதவு பாதிக்கப்பட்டவரைத் தாக்கி பறந்து சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பலத்த காயங்களுக்குள்ளான அந்த ஊழியர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை முடியும் வரை வளாகத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு சிலாங்கூர் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை முதலாளிக்கு ஒரு தடை உத்தரவு கடிதத்தை வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் 1994ஆம் ஆண்டு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் 15(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.








