பாசீர் சாலாக், ஜூலை 15 - வெப்ப வானிலை காரணமாக நெற்பயிர்கள் வாடிப் போகும் பிரச்சனையைத் தீர்க்க பாதிக்கப்பட்ட இடங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார்.
வெப்ப வானிலை காரணமாகப் புக்கிட் மேரா ஏரிப் பகுதியில் நீர்வளம் குறைந்து வருவதால் பேராக் மாநிலத்தின் கிரியான் வட்டாரத்தில் உள்ள நெல் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட கவலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நாங்கள் செயற்கை மழை முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு முன்பும் செயற்கை மழையைப் பெய்வித்துள்ளோம். ஆனால், பார்ப்போம்... இருப்பினும், நீர் தேக்கங்களில் போதுமான அளவு நீர் இருப்பது மிகவும் முக்கியமானது.
அதனால்தான் கிரியான் பள்ளத்தாக்கில் 100 கோடி வெள்ளி செலவில் மூல நீர் மாற்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது. கிரியான் பள்ளத்தாக்கிலும் தெற்கு செபராங் பிறையிலும் நிலவும் நீர் பிரச்சனையைச் சமாளிக்க இந்த திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
நேற்று பெல்கிரா பெர்ஹாட் நெல் விதை மையத்தில் நடைபெற்ற புதிய கிளிஃபீல்ட் நெல் ரகங்களான MR CL3 மற்றும் MR CL4 அறிமுக விழாவில் கலந்து கொண்டப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாய நோக்கங்களுக்காக கிரியான் பகுதிக்கு நீர் விநியோகத்தை அதிகரிப்பதற்காக சுங்கை பேராக்கிலிருந்து புக்கிட் மேரா அணை வரையிலான மூல நீர் விநியோகத் திட்டத்திற்கான திட்டமிடல் தற்போது தேசிய நீர் சேவை ஆணையத்துடன் (ஸ்பான்) இணைந்து செயல்படுத்தும் கட்டத்தில் உள்ளது என்றும் முகமது சாபு கூறினார்.








