கோலாலம்பூர், ஜூலை 10: இன்று காலை காஜாங் கூட்டரசு இடைநிலை சமயப் பள்ளி கட்டிடத்தில் உள்ள அலுவலக அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அலுவலகம் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் தொடர்பாக தனது தரப்புக்கு அதிகாலை 1.18 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து ஐந்து இயந்திரங்களுடன் 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்
"தீயணைப்புப் படையினர் அதிகாலை 1.25 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் பள்ளியின் இரண்டாவது மாடியில் 30x30 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலக அறையில் தீ விபத்து ஏற்பட்டதை கண்டறிந்தனர்," என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அதிகாலை 1.58 மணிக்கு தீ வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மூத்த தீயணைப்பு அதிகாரி II இசாம் அப்துல் ரஹ்மான் தலைமையிலான காஜாங் மற்றும் பாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களை சேர்ந்து வீரர்கள் இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன.
– பெர்னாமா


