கோலாலம்பூர், ஜூலை 10 - மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் உருவம் மற்றும் குரலை போலவே போலி காணொளி ஒன்றை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அதை பதிவேற்றிய முகநூல் கணக்கை ஜோகூர் அரச குடும்ப ஊடக மற்றும் தொடர்பு அலுவலகம், ஆர்.பி.ஓ கண்டறிந்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் எனும் மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இலாபத்தை உறுதியளிக்கும் முதலீட்டு திட்டம் தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் குரலில் இந்த காணொளி முகநூல் வழியாகப் பகிரப்பட்டதை ஆர்.பி.ஓ கண்டறிந்தது.
அதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் ஒருவரின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரான செயல் என்று ஆர்.பி.ஓ குறிப்பிட்டது.
"சட்டத்தின் விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அது தெரிவித்தது.
AI-யால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் உள்ளடக்கத்தின் அதிகரிப்பு உலகளவில் கவலைகளை எழுப்பியுள்ளது. மோசடி செய்பவர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு அல்லது அதில் ஈடுபடுவதற்கு முன்பு அதைச் சரிபார்க்க வேண்டும்.
எனவே, எப்போதும் விழிப்பு நிலையில் இருக்குமாறும் முகநூல் மற்றும் இதர சமூக ஊடகங்களில் மோசடி கும்பல்களால் உருவாக்கப்படும் இதுபோன்ற போலி கணக்குகளால் எளிதில் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அந்த அலுவலகம் அறிவுறுத்தியது.
-பெர்னாமா


