ஜோகூர் பாரு, ஜூலை 8 - ஜோகூர் பாருவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 22 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் ஒன்று சிமென்ட் டிரெய்லரில் மோதி விபத்திற்குள்ளானது.
நேற்று பிற்பகல் மணி 1.10 அளவில் அவசர அழைப்பு கிடைத்தவுடன் கெம்பாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்ததாக தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி முகமட் அஸிஸி சக்கரியா தெரிவித்தார்.
அந்த வேனில் 22 மாணவர்கள் இருந்த வேளையில் வேன் ஓட்டுனர் தனது இருக்கையில் சிக்கிக் கொண்டார். இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் காயம் அடைந்தனர் என அறிக்கை ஒன்றில் முகமட் அஸிஸி தெரிவித்தார்.
சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி வேன் ஓட்டுனர் வெளியே கொண்டுவரப்பட்டதோடு மற்றொரு மாணவனுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த விபத்தில் காயம் அடைந்த இரண்டு மாணவிகள் அவசர மருத்துவப் பாதுகாப்பு சேவை வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பான விபத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுமக்கள் உதவும் 10 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது.


