ஷா ஆலம், ஜூலை 8 - சிப்பாங் மாவட்டத்தை பசுமையான, தூய்மையான, நிலையான மற்றும் தொழில்நுட்ப பகுதியாக மாற்றுவதை அதன் புதிய நகராண்மைக்கழக உறுப்பினர் இலக்காகக் கொண்டுள்ளார்.
சிப்பாங்கின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளதாக நேற்று இந்தப் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 53 வயதான டாக்டர் அனி அகமது கூறினார்.
தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் நோக்கத்தைத் தொடர தாம் கொண்டுள்ள விருப்பத்தை வெளிப்படுத்திய அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் முன்னாள் தலைவருமான அவர், உள்ளூர் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்க்க தமக்கு மூன்று மாதங்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
சிப்பாங், அம்பாங் ஜெயாவிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், இங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. மேலும், அதன் திட்டமிடல் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் திட்டமிடப்பட்டதாகவும் தெரிகிறது என்றார் அவர்.
மேம்பாட்டில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் சிப்பாங் மக்களின் எதிர்காலத்திற்கு மிகவும் உகந்த சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த சுற்றுலா அம்சத்தையும் சமூக ஈடுபாட்டையும் வலுப்படுத்துவோம் என்று அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சில நேரங்களில் மாவட்டத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் இங்கு கொட்டப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், ஈக்கள் மற்றும் சட்டவிரோதக் கழிவுகள் தொடர்பான பிரச்சனைகளும் தீவிரமாக விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
டாக்டர் அனி கடந்த 2015 ஆம் ஆண்டு புத்ரா மலேசியா பல்கலைக்கழகத்தில் (யு பி.எம்.) மனிதவள மேம்பாட்டில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றார். மலாயா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் இளங்கலை பட்டமும், தேசிய பொது நிர்வாகக் கழகத்தில் (இந்தான்) பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவும் அவர் பெற்றுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு பொதுத்துறையில் தனது சேவையைத் தொடங்கிய அவருக்கு வீட்டுவசதி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சில் துணைப் பிரதேசச் செயலாளராகப் பணியாற்றியது உட்பட விரிவான நிர்வாக அனுபவம் உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில், உலு லங்காட் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், 2023 வரை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தை வழிநடத்தினார்.


