கோலாலம்பூர், ஜூலை 3 - நாட்டின் தலைமை நீதிபதி பதவி நிரப்பப்படும் வரை நீதித்துறை அதிகாரங்களையும் கடமைகளையும் (அரசியலமைப்பின் கீழுள்ள செயல்பாடுகள் உட்பட) மலாயா தலைமை நீதிபதி டான் ஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம் செயல்படுத்துவார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 131ஏ பிரிவு, 1964ஆம் ஆண்டு நீதித்துறை நீதிமன்றச் சட்டத்தின் [சட்டம் 91] 9(1) (பி) பிரிவு மற்றும் 9(3) பிரிவுக்கு ஏற்ப இந்த நியமனம் அமைந்துள்ளதாகக் கூட்டரசு நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் அறிக்கை கூறியது.
நீதியின் பாதுகாவலர்கள் என்ற முறையில் மலேசிய நீதித்துறை எப்போதும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்து வருகிறது. மேலும், மக்களுக்கும் நாட்டிற்கும் முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவை செய்யும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதி தனது 66 வயதில் கட்டாய ஓய்வு பெற்ற ஹஸ்னாவின் பணிக்காலம் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
மிக உயர்ந்த நீதித்துறை பதவியை வகித்த முதல் பெண்மணியான துன் தெங்கு மைமுன் துவான் மாட் நேற்று கட்டாய ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மலேசியாவின் தலைமை நீதிபதி பதவி காலியானது.
டான் ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சோமிற்குப் பதிலாக தெங்கு மைமுன் கடந்த 2019 மே 2ஆம் தேதி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


