NATIONAL

மலேசியாவின் ஆசியான் தலைமைக்கு இந்தியா முழு ஆதரவு

3 ஜூலை 2025, 10:22 AM
மலேசியாவின் ஆசியான் தலைமைக்கு இந்தியா முழு ஆதரவு

கோலாலம்பூர், ஜூலை 3 - இவ்வாண்டு ஆசியான் அமைப்புக்கு மலேசியா ஏற்றுள்ள  தலைமைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் சுபிட்சம்  ஆகியவற்றில் மலேசியா செலுத்தும் கவனத்தை அந்நாடு  பாராட்டுவதாக மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி தெரிவித்தார்.

மலேசியாவின் ஆசியான் தலைமையின் முக்கிய கருப்பொருள்களான 'உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை' மற்றும் ஆசியான் மையத்தன்மையுடன் இணங்கி செயல்பட  இந்தியா ஆர்வமாக உள்ளது  என்று அவர் பெர்னாமா தொலைக்காட்சியின்  'தி நேஷன் டிப்ளாமேடிக் டிஸ்பாட்ச்: மலேசியா-இந்தியா உறவுகள்: முன்பு, இப்போது, ​​அடுத்து' எனும் நிகழ்ச்சியின் போது கூறினார்.

மியான்மர் மூலம் இந்தியா-ஆசியான் இணைப்பை மேம்படுத்தவும் இந்தியா முயற்சிப்பதாக அவர் மேலும் கூறினார்.

நாங்கள் ஒரு வளமான மற்றும் நிலையான மியான்மர் தேசத்தைக் காண விரும்புகிறோம். அங்குதான் ஆசியானுடன் எங்களுக்கு இணக்கம் உண்டாகிறது  என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பெர்னாமாவுக்கு  பேட்டியளித்த ரெட்டி, ஆசியான்-இந்தியா உறவுகள் விரிவான விவேகப் பங்காளித்துவ நிலையை எட்டியுள்ளதாகவும்  அடுத்த வாரம் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை (ஏ.எம்.எம்.) இந்தியக் குழு "நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான" கண்ணோட்டத்துடன் அணுகும் என்றும் குறிப்பிட்டார்.

அக்டோபரில் நடைபெற உள்ள ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக இந்தியா தனது பிராந்திய முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்ட வகை செய்யும் இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருதரப்பு உறவுகள் குறித்து  கருத்துரைத்த ரெட்டி,  உலகளாவிய அபிலாஷைகளையும் பிராந்திய பொறுப்புகளையும் கொண்ட ஒரு நாடாக  மலேசியா உருவெடுத்துள்ளது என்றார்.

அமெரிக்காவிற்கு வெளியே இருபது லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினரைக் கொண்ட  மற்றும்  இந்தியாவிலிருந்து மிக அதிகமானோர் புலம்பெயர்ந்தோர் கொண்ட நாடாக மலேசியா விளங்குவதை குறிப்பிட்ட ரெட்டி, வலுவான மக்களுடனான மக்கள் உறவுகளையும் எடுத்துரைத்தார்.

மலேசியா போன்ற பங்காளி நாடு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மலேசியாவை நீட்டிக்கப்பட்ட  அண்டை நாட்டின் ஒரு பகுதியாக நாங்கள் கருதுகிறோம் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.