லஹாட் டத்து, ஜூலை 2 - செம்பனை எண்ணெய் ஏற்றிச் சென்ற டிரெய்லருடன் நான்கு சக்கர இயக்க வாகனம் மோதியதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவம் இங்குள்ள ஜாலான் லஹாட் டத்து-சண்டகான் சாலையின் 16வது மைலில் நேற்றிரவு நிகழ்ந்தது.
நான்கு சக்கர வாகனத்தின் ஓட்டுநரான 28 வயது ஆடவர் மற்றும் வாகனத்தின் முன் மற்றும் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகளே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர் என்று லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சம்சோவா ரஷீட் தெரிவித்தார்.
வாகனத்தில் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்ட அனைவரும் தீயணைப்புப் படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். எனினும் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் டிரெய்லர் ஓட்டுநரான 61 வயதான ஆடவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. மேல் சிகிச்சைக்காக அவர் லஹாட் டத்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
விபத்து தொடர்பாக தனது துறைக்கு இரவு 8.52 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் 12 பேர் கொண்ட குழு அவசர சேவைகள் உதவிப் பிரிவுடன் தீயணைப்பு நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சம்சோவா தெரிவித்தார்.








