கோலாலம்பூர், ஜூன் 26 - பராமரிப்புத் திட்டம் தொடர்பில் 70,000 வெள்ளியை கையூட்டாகப் பெற்றதாக கோலாலம்பூர் பொதுப்பணித் துறையின் முன்னாள் இயக்குநர் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் 51 வயதான டத்தோ நார்மன் முகமட் ரபானி மறுத்து விசாரணை கோரினார்.
தனது அதிகாரப்பூர்வ கடமைகள் தொடர்பான நடவடிக்கை அல்லது வணிகத்துடன் தொடர்புடைய நபரிடமிருந்து 70,000 வெள்ளியைப் பெற்றதாக அவருக்கு எதிரான குற்றப்பதாதிரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 2025 ஜனவரி 23 வரை ஒரு பேரங்காடியில் இக்குற்றத்தைப் அவர் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 165வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது,
இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு நிர்ணயித்த நீதிபதி சுசானா ஹூசேன், குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி அளித்தார்.
மேலும், அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் அருகிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் ஆஜராகவும் வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை மிரட்டுவதைத் தவிர்க்கவும் உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் நத்ரா ஃபரேஹா ரஹ்மட் வழக்கை நடத்திய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம் ஐமான் ஆஜரானார்.


