(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 26 - கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் 10ஏ மற்றும் அதற்கும் மேல் தேர்ச்சி நிலையை பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வியைத் தொடர்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும் என்ற அமைச்சரவையின் முடிவை பாப்பாராய்டு வரவேற்றுள்ளார்.
இது, இனம் மற்றும் வாழ்க்கைப் பின்னணியைப் பாராமல் அனைத்து மாணவர்களின் நிலையை உயர்த்தக்கூடிய அர்த்தமிக்க மற்றும் சரியான முடிவாகும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
நீதி, தகுதி அடிப்படையில் வாய்ப்பு, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தும் மடாணி அரசின் உணர்வுக்கேற்பவும் இந்த முடிவு அமைந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அதேசமயம், கல்வியில் தனித்துவத்துடன் விளங்கும் மாணவர்களை அங்கீகரிப்பதில் அரசாங்கத்திற்கு உள்ள கடப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கல்வியில் தீவிர கவனம் செலுத்தி சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்வதற்குரிய உத்வேகத்தை அரசின் இந்த நடவடிக்கை வழங்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கல்வி என்பது ஒரு தேசத்தின் எதிர்காலத்திற்கான முதலீடு. ஆகவே, அரசாங்கத்தின் இந்த முடிவை நான் வரவேற்பதோடு நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களின் நலன் கருதி இதனை நீண்ட காலக் கொள்கையாக அமல்படுத்தும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். சிறப்பாக வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


