கோலாலம்பூர், ஜூன் 21 - சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி யயாசான் பேங்க் ரக்யாட் (ஒய்.பி.ஆர்.) அறக்கட்டளையுடன் இணைந்து 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற 311 மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வை நடத்தியது.
இந்த முன்னெடுப்புக்கு 143,200 வெள்ளி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
மாணவர்களின் சாதனைகளை அங்கீகரித்து வெற்றிக்காக மேலும் பாடுபட அவர்களை ஊக்குவிப்பதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.
தேர்வில் சிறந்த அடைவுநிலையை பெற்ற 311 மாணவர்கள் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் வழி பயனடைந்தனர். இது ஒரு புதிய முயற்சி அல்ல, ஆனால் எங்களின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.
கடந்த காலங்களில்' மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி சேவை மையத்திற்கு கிட்டத்தட்ட 500,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளோம்.
வரும் ஆண்டுகளில் இந்த முயற்சிகளைத் தொடர நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சருமான அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுங்கை பூலோ முழுவதும் உள்ள 11 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இச்நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களில் பத்து பேர் 11A மதிப்பெண்களும், 17 பேர் 10A மதிப்பெண்களும், 83 பேர் 9A மதிப்பெண்களும், 82 பேர் 8A மதிப்பெண்களும், 119 பேர் 7A மதிப்பெண்களும் பெற்றனர்.








