ஜெர்த்தே, ஜூன் 17 - மூன்று வயது சிறுமி நீரோடையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இத்துயரச் சம்பவம் இங்குள்ள புக்கிட் கெனாக், கம்போங் குண்டூரில் நேற்று மாலை நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட இந்தான் இனாரா முகமது ஹரிஸ் ஹுசைனி என்ற அச்சிறுமி தனது பாட்டி வீட்டின் பின்னால் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தமது துறைக்கு இரவு 8.53 மணிக்கு தகவல் கிடைத்தாக பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசாமுடின் அகமது @ அபு கூறினார்.
அச்சிறுமி மாலை 6.00 மணியளவில் தனது பாட்டி வீட்டின் பின் கதவு வழியாக வெளியேறி யாரும் கவனிக்காத நிலையில் தனியாக விளையாடியதாகக் கூறப்படுகிறது.
மாலை 6.10 மணியளவில் அச்சிறுமி அவரது பாட்டி வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள நீரோடையில் மிதப்பதை அவரது உறவினர் கண்டார். பின்னர் அச்சிறுமி உடனடியாக பெசுட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அச்சிறுமியின் உடல் மீது பிரேத பரிசோதனை இன்று நடத்தப்பட்டதாக கூறிய அவர், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.


