புத்ராஜெயா, ஜூன் 17 - அண்மையில் நிகழ்ந்த சுல்தான் இட்ரிஸ் (உப்ஸி) கல்விப் பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுநரின் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர் உரிமத்தை (பி.எஸ்.வி.) சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) உடனடியாக ரத்து செய்துள்ளது.
அந்த விபத்து தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணையைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 56 (4)வது விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பாட்லி ராம்லி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர் நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் பேருந்து இயக்க அனுமதியை குத்தகைக்கு எடுத்த நிறுவனம் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராகவும் ஜே.பி.ஜே. விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் சாலைப் பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஏதுவாக விசாரணை முடியும் வரை உரிமம் இடைநிறுத்தம் அமலில் இருக்கும் என்று அவர் கூறினார்.
சாலையைப் பயன்படுத்துவோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சட்ட மீறல் விஷயத்திலும் ஜே.பி ஜே. சமரசம் செய்யாது என்ற உறுதிப்பாட்டை ஏடி மறுபடியும் வலியுறுத்தினார்.
கடந்த ஜூன் 9 ஆம் தேதி அதிகாலையில், பேராக் மாநிலத்தின் கிரீக், தாசேக் பந்திங் அருகே ஜாலான் ஜெலி-கிரீக்கில் உப்ஸி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது.
திரங்கானுவின் ஜெர்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிமில் உள்ள உப்ஸி பிரதான வளாகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற இந்த விபத்து நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர்.


