புத்ராஜெயா, ஜூன் 12 - இவ்வாண்டு கெஅமத்தான் மற்றும் காவாய் தின விழாக்களை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட விழாக்கால உச்சவரம்பு விலைத் திட்டத்தின் போது , உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு நாடு முழுவதும் 1,478 வணிக வளாகங்களை ஆய்வு செய்தது.
கெஅமத்தான் விழா உச்சவரம்பு விலைத் திட்டம் கடந்த மே 27 முதல் ஜூன் 2 வரை நடைபெற்றது. அதே நேரத்தில் கவாய் தின உச்சவரம்பு விலைத் திட்டம் மே 29 முதல் ஜூன் 4 வரை அமலில் இருந்தது.
கெஅமத்தான் விழா செயல்படுத்தப்பட்ட காலத்தில் 667 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் விதிகளை மீறிய வர்த்தகர்கள் மீது இரண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று அமைச்சின் அமலாக்க தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்தார்.
பொருள்களுக்கான சிறப்பு இளஞ்சிவப்பு விலைக் குறியீட்டைக் காட்டத் தவறியதற்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
காவாய் தின உச்சவரம்பு விலைத் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது 811 ஆய்வுகள் நடத்தப்பட்டன. தவறு செய்த வர்த்தகர்கள் மீது ஒன்பது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் வெ.1,647.40 மதிப்புள்ள பறிமுதல்கள் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு பண்டிகைகளின் போது உச்சவரம்பு விலைத் திட்ட விதிமீறல் தொடர்பில் அமைச்சுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் ஆய்வு செய்யப்பட்ட பெரும்பாலான வணிகர்கள் உச்சவரம்பு விலைத் திட்டத்தை முறையாகப் பின்பற்றினர் என்றும் அஸ்மான் கூறினார்.


