கோம்பாக், ஜூன் 7 - ஆண்டு இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026 சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் பொது வசதி மேம்பாடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை விவேகமான, வசிக்கத்தக்க மற்றும் வளப்பமான மாநிலத்தை உருவாக்கும் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் தொலைநோக்கு இலக்கிற்கு ஏற்ப அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
அழகுபடுத்தும் திட்டங்கள் மற்றும் மேம்பாடுகளை மறந்துவிடக் கூடாது. அடுத்தாண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்.
இதுதான் வசிக்கத்தக்க தன்மை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு குடியிருப்பாளரின் தேவை இது என்பதை நாங்கள் அறிவோம் என்று அவர் இன்று இங்குள்ள பங்சாபுரி கெனாங்காவில் நடைபெற்ற 'குர்பன் ஸ்ட்ராடா' கோம்பாக் நிகழ்வின் போது கூறினார்.
சிலாங்கூரில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க மாநில அரசு 1 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக அமிருடின் குறிப்பிட்டார். இதன் தொடர்பில் இன்னும் 10,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றைத் தீர்க்க 8 கோடி வெள்ளி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கோடி வெள்ளியில் நிதியை கடந்தாண்டு மே மாதம் 31ஆம் தேதி மந்திரி புசார் தொடக்கினார்.
பல ஆண்டுகளாக குடியிருப்பாளர்களைப் பாதித்து வரும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மாநில நிர்வாகத்தின் அர்ப்பணிப்பை இந்த ஒதுக்கீடு காட்டுகிறது என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.








