கோலாலம்பூர், ஜூன் 6- நாளை கொண்டாடப்படும் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை காலத்தில் சாலைப் பயனீட்டாளர்களின் பாதுகாப்பையும் சாலைகளில் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக அரச மலேசிய போலீஸ்படை இன்று முதல் திங்கள்கிழமை (ஜூன் 9) வரை 'ஓப் லஞ்சார்' சாலை பாதுகாப்பு இயக்கத்தை அமல்படுத்துகிறது.
மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் 1,858 காவல்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள், கூட்டரசு சாலைகள், மாநில சாலைகள் மற்றும் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து காவல் துறை இயந்திரங்களும் விரிவாகவும் முறையாகவும் ஒன்று திரட்டப்படும் என்று அவர் கூறினார்.
வாகனமோட்டிகள் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் வழியாக வாகனப் போக்குவரத்து குறித்த சமீபத்திய தகவல்களை எப்போதும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பொதுமக்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிட இது பெரிதும் உதவும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்கள் விவேகமுடன் சாலையைப் பயன்படுத்தும் அதேவேளையில் போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்தும் அவசரகாலப் பாதைகளை தவறாகப் பயன்படுத்தாமலும் போக்குவரத்தை தடுக்கும் அளவுக்கு வாகனங்களை நிறுத்தாமலும் இருக்கும்படி முகமட் யூஸ்ரி வேண்டுகோள் விடுத்தார்.
விபத்துக்கு வழிவகுக்கும் குற்றங்களைப் புரியும் வாகனமோட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


