கோத்தா பாரு, ஜூன் 6 - கடந்த மாதம் 12ஆம் தேதி மத்திய சேமமப்படையின் (எஃப்.ஆர்.யு.) 18 உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற டிரக்கை மோதிய லோரி நிறுவனத்திற்கு எதிராக சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
சம்பந்தப்பட்ட லாரி நிறுவனத்தின் உரிமையாளரை உள்ளடக்கிய இந்த விசாரணை 2010 ஆம் ஆண்டு தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் 57 வது பிரிவின் கீழ் நடத்தப்பட்டு வருவதாக ஜே.பி.ஜே. அமலாக்கப் பிரிவின் முதன்மை இயக்குநர் முகமது கிஃப்ளி மா ஹாசன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட லோரியை ஜே.பி.ஜே. பறிமுதல் செய்துள்ளது. மேலும் ஜூன் மாத இறுதிக்குள் விசாரணை ஆவணங்களை தயாரிக்க விசாரணை அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்ததும் அதன் தொடர்பான அறிக்கை மேல் நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்கு ஹஜ்ஜூப் பெருநாள் சாலை பாதுகாப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட அனுமதி நிபந்தனைகளை மீறியிருப்பது ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அந்த லோரி நிறுவனம் அங்கீகரிக்கப்படாத சுமையை, அதாவது கற்களை ஏற்றிச் சென்றதன் மூலம் அனுமதி நிபந்தனைகளை மீறியது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கு மட்டுமே அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த மே 12ஆம் தேதி தெலுக் இந்தான், ஜாலான் சிக்குஸ்–சுங்கை லம்பான் சாலையில் 18 எஃப். ஆர்.யு. உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற டிரக் லோரி ஒன்றுடன் மோதியது.
இந்த விபத்தில் ஒன்பது உறுப்பினர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.


