இஸ்கந்தார் புத்ரி, ஜூன் 3 - இங்குள்ள கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு வீட்டில் இரு சீன நாட்டவர்களான ஒரு இளம் பெண் மற்றும் அவரது பாட்டியிடம் கொள்ளையிட முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவனை போலீசார் சம்பவம் நடந்து சுமார் மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர்.
இச்சம்பவம் காலை சுமார் 11.30 மணியளவில் நிகழ்ந்ததாக இஸ்கந்தார் புத்ரி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எம். குமரேசன் கூறினார்.
பதினான்கு மற்றும் 70 வயதுடைய பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலையுயர்ந்தப் பொருள்களை கொள்ளையடிப்பதில் தோல்வி கண்டப் பின்னர் தப்பியோடிய 33 வயதான சந்தேக நபர் பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் கழுத்தை நெரித்த சந்தேகப் பேர்வழி விலையுயர்ந்த பொருட்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டான். இதனால் அவர்களுக்கிடையே போராட்டம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு இரண்டு முந்தையக் குற்றப் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
கொள்ளையில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 394 இன் கீழ் விசாரணைக்காக சந்தேக நபர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


