செய்தி ஆரா.ராஜா
ஷா ஆலம், ஜூன் 1- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் மேன்மையை பறைசாற்றும் நிகழ்வுகளுடன் தமிழ் வண்ண விழா 2025 நிகழ்வு ஷா ஆலம் செக்சன் 32, எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
மனித வளம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த இந்நிகழ்வில் ஒற்றுமைத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், ஆலம் மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஷாரின் அகமது உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலை, கலாசாரத்தை பாதுகாத்து மேலோங்கச் செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வை மலேசிய கல்வியமைச்சின் ஆதரவுடன் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 13வது மண்டலம், எஸ்.ஆர்.எஃப்.ஏ. கலை மற்றும் கலாசார அமைப்பு, ஸ்ரீ ராதா கிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.
காலை 8.00 மணி தொடங்கி மாலை 7.00 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினருமான திரு. நட்டின்ரன் ராஜ் பாஸ்கரன் கூறினார்.
இந்நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து மகா கவி பாரதியாரின் அச்சமில்லை என்ற பாடலை ஒன்று சேர்ந்து பாடும் அங்கம் இடம் பெறும்.

அதிகப் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கவிதை வாசிப்புக்காக மலேசிய
சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கில் இந்த முயற்சி
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ் வண்ண விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றில் இந்தியர்களின் பண்டையக் கால பொருள் கண்காட்சி, ரங்கோலி கோலப்போட்டி, தோரணம் பின்னும் போட்டி, பரதநாட்டியப் போட்டி, பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி, மண்பாண்டங்கள் செய்யும் பயிற்சிப் பட்டறை, தமிழ் பேச்சுப் போட்டி, உள்ளிட்ட பல சுவாரஸ்ய அங்கங்களும் அடங்கும்.
இதுதவிர, புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், பொம்மலாட்டம், உறுமி மேளம், சண்டா மேள வாத்தியம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.








