NATIONAL

ஷா ஆலமில் தமிழ் வண்ண விழா - 1,000 மாணவர்கள் பாரதியார் கவிதை பாடி சாதனைப் படைப்பர்

30 மே 2025, 4:45 PM
ஷா ஆலமில் தமிழ் வண்ண விழா - 1,000 மாணவர்கள் பாரதியார் கவிதை பாடி சாதனைப் படைப்பர்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம் மே 30 - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் மேன்மையை பறைசாற்றும் நிகழ்வுகளுடன் தமிழ் வண்ண விழா 2025 எனும் மாபெரும் நிகழ்வு ஷா ஆலம் செக்சன்  32,   எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டர் மண்டபத்தில் எதிர்வரும் ஜூன் முதல் தேதி  ஞாயிற்றுக் கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

காலை 8.00 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மகா கவி பாரதியார் போல் உடையணிந்து அவரது ‘அச்சமிலை‘ என்ற பாடலை ஒன்று சேர்ந்து பாடுவர்.

தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலை, கலாசாரத்தை பாதுகாத்து மேலோங்கச் செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வை மலேசிய கல்வியமைச்சின் ஆதரவுடன்  ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 13வது மண்டலம்,  எஸ்.ஆர்.எஃப்.ஏ. கலை மற்றும் கலாசார அமைப்பு, ஸ்ரீ ராதா கிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

பல்வேறு ஜனரஞ்சக அங்கங்களுடன் நடைபெறும் இவ்விழாவில் இரண்டாயிரத்திற்கும்

மேற்பட்டோர் பங்கேற்பர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக நிகழ்வின் ஏற்பாட்டுக்

குழுத் தலைவரும் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினருமான திரு. நட்டின்ரன்

ராஜ் பாஸ்கரன் கூறினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக ஒற்றுமைத் துறை துணையமைச்சர்

சரஸ்வதி கந்தசாமி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ், ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ பவுஸி மெகாட் யாத்திம் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்த மகா கவி பாரதியாரின் அச்சமில்லை என்ற பாடலை ஒன்று சேர்ந்து பாடுவது இந்நிகழ்வின் சிறப்பு அங்கமாகும்.

அதிகப் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கவிதை வாசிப்புக்காக மலேசிய

சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் ஒத்துழைப்பின் காரணமாக இந்நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்த தமிழ் வண்ண விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் காட்சிக் கூடங்களையும் ஏற்பாடு செய்துள்ளோம். அவற்றில் இந்தியர்களின் பண்டையக் கால பொருள் கண்காட்சி, ரங்கோலி கோலப்போட்டி, தோரணம் பின்னும் போட்டி, பரதநாட்டியப் போட்டி, பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி, மண்பாண்டங்கள் செய்யும் பயிற்சிப் பட்டறை, தமிழ் பேச்சுப் போட்டி, உள்ளிட்ட பல சுவாரஸ்ய அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், பொம்மலாட்டம், உறுமி மேளம், சண்டா மேள வாத்தியம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளும்படி நட்டின்ரன் ராஜ் கேட்டுக் கொண்டார்.

இந்த விழா தொடர்பான மேல் விபரங்களுக்கு 014-3323170 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.