கோத்தா கினபாலு, மே 30 - மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் சிரமங்கள்
மற்றும் சவால்கள் குறித்த செய்திகளை வெளியிடும் அதேவேளையில்
தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்குவதில் ஊடகவியலாளர்கள்
தொடர்ந்து உத்வேகத்துடன் இருப்பார்கள் எனத் தாம் நம்புவதாகப் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நேற்று அனுசரிக்கப்பட்ட தேசிய ஊடகவியலாளர் தினத்தையொட்டி
(ஹவானா) தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், பொது
மக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் வழங்குவதில அவர்கள்
கொண்டிருக்க வேண்டிய முக்கிய பங்கையும் வலியுறுத்தினார்.
மாநிலங்களையும் நாட்டையும் மேம்படுத்துவதற்கான முயற்களுக்கு
ஆதரவையும் ஆக்ககரமான விமர்சனங்களையும் வழங்குவதும்
ஊடகவியலாளர்களின் கடமைகளில் ஒன்றாகும் என அவர் சொன்னார்.
தனித்துவமிக்க பணியினை ஏற்றுள்ள ஊடகவியலாளர்களுக்கு நான் எனது
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் கடுமையான
போராட்டங்களை வெளிக்கொணர்வதில் அவர்கள் முக்கியப் பங்கினை
ஆற்றுகின்றனர் என்றார் அவர்.
நேற்றிரவு இங்கு பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களுடனான சந்திப்பு
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
தங்களின் நிபுணத்துவ கடப்பாடுகளை நிறைவேற்றுவதில்
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கி வரும் சிரமங்களையும் தியாகங்களையும்
தாம் உணர்ந்துள்ளதாகக் கூறிய அன்வார், முழு அர்ப்பணிப்பு உணர்வுடன்
தங்கள் பணியினைத் தொடருமாறு அவர்களுக்கு வலியுறுத்தினார்.
ஹவானா தினம் இவ்வாண்டு மே 29ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
ஹவானா உச்சநிலை மாநாடு வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெறும். இந்த மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைப்பார்.


