சிகாமாட், மே 29 - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பயணம் செய்த
நான்கு சக்கர இயக்க வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில்
விழுந்ததில் தந்தையும் அவரின் மகளும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் சிகாமாட்-லாபிஸ் சாலையில் கம்போங் குவாங்சாய்
அருகே நேற்றிரவு நிகழ்ந்ததாக பண்டார் பாரு சிகாமாட் தீயணைப்பு
மற்றும் மீட்பு நிலையத்தின் முதன்மை அதிகாரி (பிகேபி 11) அபிடின் சே
டேராமான் கூறினார்.
இந்த விபத்தில் 39 வயது ஆடவரும் அவரின் ஒன்பது வயது மகளும்
உயிரிழந்த வேளையில் 32 வயதான மனைவி, 11, நான்கு மற்றும் இரண்டு
வயதுடைய பிள்ளைகள் காயமடைந்ததாக அவர் சொன்னார்.
நான்கு சக்கர இயக்க வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில்
விழுந்தது தொடர்பில் நேற்று மாலை 6.47 மணியளவில் தாங்கள்
தகவலைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒன்பது பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர்
தீயணைப்பு வாகனத்தில் ஒன்பது கிலோ மீட்டரில் உள்ள சம்பவ
இடத்திற்கு விரைந்தாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் டோயோட்டா ஹைலக்ஸ் ரக வாகனம் ஒன்று
பள்ளத்தில் கவிழ்ந்து கிடப்பதையும் அதன் அடியில் இருவர்
சிக்கியிருப்பதையும் தீயணைப்பு வீரர்கள் கண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த
வாகனத்தை நிலைப்படுத்தி அதன் அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்
என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
எனினும், அவ்விருவரும் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்த
மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். இந்த விபத்தில் காயங்களுக்கள்ளான இதர நால்வரும் வாகனத்தின் இடிபாடுகளிலிருந்து சொந்தமாக வெளியேறினர் என்றார் அவர்.


