கோத்தா கினபாலு, மே 29 - பெனாம்பாங், கம்போங் மோயோக்கில் நேற்றிரவு நான்கு சக்கர இயக்க வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் அந்த வாகனத்தில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த வேளளையில்
மற்றொருவர் காயமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பில் இரவு 8.15 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
சப்பவ இடத்தை அடைந்த போதுஇஸுசு பிங்ஹார்ன் ரக நான்கு சக்கர இயக்க வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து கிடப்பதை அவர்கள் கண்டனர்.
பள்ளத்தில் சிக்கியிருந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களையும் மீட்க தீயணைப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர் என்று தீயணைப்புத் துறை அந்த அறிக்கையில் கூறியது.
சம்பவ இடத்திலிருந்த அவசர மருத்துவ சேவைப் (இ.எம்.ஆர்.எஸ்.) பிரிவு காயமடைந்த ஒருவருக்கு ஆரம்ப சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியது.
நாற்பது மற்றும் 49 வயதுடைய இரண்டு ஆடவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


