கோலாலம்பூர், மே 28 - ஆசியான் மருந்து பாதுகாப்பு மற்றும் சுயசார்பு
(ஏ.டி.எஸ்.எஸ்.ஆர்.) மற்றும் ஏ.டி.எஸ்.எஸ்.ஆர். பிராந்திய
கூட்டாண்மைக்கான செயல் திட்டம் மூலம் மருந்து விநியோகப்
பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும்
கடப்பாட்டை ஆசியான் உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த பிரகடனம் கடந்த திங்கள்கிழமை 46வது ஆசியான் உச்சநிலை
மாநாட்டின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தயாரிப்பு, பதிவு, கொள்முதல்,
விநியோகம் தொடங்கி மருந்துகளின் ஆயுள் சுழற்சியை
வலுப்படுத்துவதில் தங்களுக்கு உள்ள கடப்பாட்டையும் அந்நாடுகள்
புலப்படுத்தின.
தடையற்ற விநியோகச் சங்கிலி வாயிலாகப் பாதுகாப்பான, தரமான
மருந்துகள் எப்போதும் கிடைப்பதை உறுதி செய்வதை இந்த பிரகடனம்
நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்து தளங்களிலும் வெற்றிகரமான ஒத்துழைப்பை உறுதி
செய்வதற்காக முன்னுரிமையுடன் தொடர்புடைய மேம்பட்டத் தகவல்
தொடர்பு மற்றும் தரவு பகிர்வு முறையின் கீழ் இதனை அடைய முடியும்
என ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய
மாநாடுகளின் இறுதியில் வெளியிட்டபட்ட பிரகடனத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியான் உறுப்பு நாடுகள் மத்தியில் ஒழுங்கு முறை வழிகள்
சீரமைக்கபடுவதை, குறிப்பாக அவசர நிலையின் போது மருந்து சார்ந்த
பொருள்களை கொள்முதல் செய்வது மற்றும் விநியோகம் செய்வதில்
ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த பிரகடனம் வகை செய்கிறது.
இந்த பிரகடனத்தின் வாயிலாக ஆசியான் உறுப்பு நாடுகள் மத்தியில்
தடையற்ற மற்றும் விரைவான மருந்துப் பொருள்களின் விநியோகத்தை
உறுதி செய்ய இயலும்.








