கோலாலம்பூர், மே 27 - உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழா களம் மூன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
உயர்கல்வி கழக மாணவர்களின் பேச்சுத் திறனையும் சிந்தனையையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்தக் தளமாக இவ்விழா அமைந்ததாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
உப்சி பல்கலைக்கழகத்தின் பரதநாட்டியப் பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வளர்த்தமிழ் மன்றத்தின் இணை ஆதரவில் சனிக்கிழமை 'முவாலிம் மண்டபத்தில்" தேசிய அளவிலான சொற்போர் போட்டி அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக அக்கழகத்தின் தலைவர் உதயவேலன் லிங்கம் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதாக உஷாநந்தினி மோகன் கூறினார்
இப்போட்டியில் மூன்றாம் நிலையில் உப்சி பல்கலைக்கழகத்தின் செந்தமிழ் செல்வங்கள் குழுவினரும் இரண்டாம் நிலையில் துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழக தமிழ் ஆய்வியல் துறையின் அக்னிச் சுடர்கள் குழுவினரும் முதல் நிலையில் தர்க்கவாதிகள் குழுவினரும் வாகை சூடினர்.
சிறந்த பேச்சாளர் எனும் விருதை, துவான்கு பைனூனின் ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த்துறை பயிற்சி ஆசிரியர்கள் கனகேஷன் கணேஷன் மற்றும் நித்யா மதனா தட்டிச் சென்றனர்.
இதனிடையே, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சிறுகதை எழுதும் போட்டியும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கவிதை ஒப்புவித்தல் போட்டியும் இயங்கலை வாயிலாக நடைபெற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
-- பெர்னாமா


