சிரம்பான், மே 22- வேப் அல்லது மின் சிகரெட்டுகளின் விற்பனையைத் தடை செய்வது குறித்து நெகிரி செம்பிலான் மாநிலம் பரிசீலித்து வருகிறது.
இந்த முடிவில் பொது சுகாதாரம் மற்றும் குறிப்பாக இளைஞர்களிடையே, அதன் பயன்பாட்டினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கருத்தில் கொள்ளப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் கூறினார்.
மேலும் விவாதம் மற்றும் நடவடிக்கைக்காக இந்த விவகாரம் மாநில ஆட்சிக்குழு குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.
மின் சிகரெட்டுகள் அல்லது இதர சிகரெட்டுகளாக இருந்தாலும் அவை அனைத்தும் தீங்கு விளைவிக்கும் என அமினுடின் செய்தியாளர்களிடம் கூறினார்.
உள்ளூர் அதிகாரிகள் வேப் விற்பனை உரிமங்களை அங்கீகரிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார், மேலும், இதுபோன்ற தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் அடையாள பலகைகள் தொடர்பாக ஊராட்சி மன்ற அதிகாரிகள் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


