கோலாலம்பூர், மே 16 - லீமா'25 எனப்படும் 2025 லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட கடல்சார் சாகச ஒத்திகையின் போது அரச மலேசிய கடற்படை படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் என அரச மலேசிய கடற்படை ஒரு அறிக்கையில் அறிவித்தது.
இந்த சம்பவத்தில் படகிலிருந்த குழுவினருக்கு உயிரிழப்புகளோ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை.
இருப்பினும், அக்குழுவினர் தொடர் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அரச மலேசிய கடற்படையின் கொடியுடன் கூடிய படகு கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலாப் படகில் மோதி கரையில் சறுக்கி சென்றதைச் சித்தரிக்கும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
பயிற்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்த பொதுமக்கள் இந்த சம்பவத்தைப் பதிவு செய்ததாகத் தெரிகிறது.


