ஜோகூர் பாரு, மே 15 – மானிய விலையை கொண்ட சமையல் எண்ணெயின் விநியோகம் நாடு தழுவிய அளவில் மண்டல வாரியாக விரிவுபடுத்தப்படும்.
பேக்கேஜிங் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட POS எனப்படும் விற்பனை மையங்களுக்கு நியமிக்கப்பட்ட மண்டலங்கள் வழியாக தொடர்ந்து பொருட்களை வழங்க வேண்டும். இதன் மூலம், விநியோக இடையூறுகளின் சிக்கலைச் சமாளிக்க முடியும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.
உதவித் தொகைக் கொண்ட சமையல் எண்ணெய்களை பொட்டலமிடும் நிறுவனம் ஒன்றை பார்வையிட்டப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபுசியா சாலே இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் 300 பொட்டலமிடும் நிறுவனங்களை உட்படுத்தி ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் டன், உதவித் தொகைக் கொண்ட சமையல் எண்ணெய் ஒதுக்கீட்டை அரசாங்கம் நிலைநிறுத்தி வருவதாக அவர் கூறினார்.
இந்த திட்டம் இதுவரை சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா


