NATIONAL

எஃப்.ஆர்.யு. டிரக் விபத்து - மூன்று உறுப்பினர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

15 மே 2025, 3:07 AM
எஃப்.ஆர்.யு. டிரக் விபத்து - மூன்று உறுப்பினர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

ஈப்போ, மே 15 - தெலுக் இந்தானில் நேற்று முன்தினம்  காலை நிகழ்ந்த  விபத்தில் சிக்கிய மத்திய சேமப் படையின்  (எஃப்.ஆர்.யு.) மூன்று உறுப்பினர்கள் இன்னும் கவலைக்கிடமான  நிலையில் உள்ளனர்.

கார்ப்ரல் ஹஸ்லிசால் முகமது அலி (வயது 44), சார்ஜெண்ட் மஸ்லான் மாட் (வயது 50) மற்றும் கார்ப்ரல் முகமது  இஸ்வான் இஷாக் (வயது 39 ) ஆகிய மூவருக்கும் இன்னும் நினைவு திரும்பவில்லை என்று ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஜைனல் அபிடின் கூறினார்.

அவர்கள் தற்போது தெலுக் இந்தான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களைக் காண  நாங்கள் இன்று மருத்துவமனைக்கு  வருகை மேற்கொண்டோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த மேலும்  நான்கு உறுப்பினர்களுக்கு  சுயநினைவு திரும்பிய வேளையில் அவர்களும்  அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.

கார்ப்ரல் முகமது சுல்னைடி முகமது ஜூல்கிப்லி (வயது 34) லான்ஸ் கார்ப்ரல் முகமது அனிக் தவுபிக் ரோஸி (வயது 26), கார்ப்ரல் முகமட் ஹரிசுல் இக்சன் முகமது மஹாபுடின் (வயது 39) மற்றும் சார்ஜெண்ட் முகமது பரிஹ் அலி (வயது 44) ஆகியோரே அந்த நால்வராவர்.

நேற்று முன்தினம் காலை 8.50 மணியளவில்  நிகழ்ந்த இந்த சம்பவத்தில், ஈப்போ, சுங்கை செனாம் மத்திய சேமப்படையின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.