லெங்கோங், மே 13 - மத்திய சேமப்படையின் உறுப்பினர்களை பலி
கொண்ட எஃப்.ஆர்.யு. வாகனம் மற்றும் கல் ஏற்றிய லோரி சம்பந்தப்பட்ட
விபத்து தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படையின் மூலம் உள்துறை
அமைச்சு விரிவான விசாரணையை மேற்கொள்ளும்.
தெலுக் இந்தான், ஜாலான் சிக்குஸ்-சுங்கை லம்பான் சாலையில் நிகழ்ந்த
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவித்துக் கொண்ட உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்
சம்சுல் அனுவார் நசாரா, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பத்தின் நலன் காப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த இக்கட்டான
சூழலை எதிர்கொள்வதற்குரிய மனவலிமையைப் பெற்றிருப்பார்கள் எனத்
தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
இந்த சம்பவம் மீதான விசாரணையில் மட்டும் காவல் துறையினர்
கவனம் செலுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காப்பதிலும் கவனம்
செலுத்துவார்கள் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இந்த விபத்தில் இதுவரை ஒன்பது எஃப்.ஆர்.யு. உறுப்பினர்கள் உயிரிழந்தது
உறுதி செய்யப்பட்டதாக கீழ் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
டாக்டர் பக்ரி ஜைனால் அபிடின் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இந்த விபத்து காலை 8.54 மணியளவில் நிகழ்ந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த
போது அந்த எஃப்.ஆர்.யு. வாகனத்தில் 15 வீர்ர்களும் ஓட்டுநரும்
இருந்தனர்.


