ஈப்போ, மே 9 - வேகக் கட்டுப்பாட்டை இழந்த எம்.பி.வி. வாகனம் ஒன்று
துரித உணவகம் ஒன்றை மோதி உள்ளே நுழைந்ததில் மூதாட்டி ஒருவர்
காயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் சித்தியவானில் நேற்றிவு நிகழ்ந்தது.
இரவு மணி 9.10 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் எழுபது வயதுடைய
அந்த மூதாட்டி வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டார். அவரை
அங்கிருந்த பொது மக்கள் விரைந்து காப்பாற்றினர்.
இந்த விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு
குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் மாநில தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர்
சபோராட்ஸி நோர் அகமது கூறினார்.
இச்சம்பவ இடத்தில் நிலைமையை மதிப்பீடு செய்த தீயணைப்பு வீரர்கள்
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சுகாதார அமைச்சின்
பணியாளர்கள் முதலுதவி வழங்குவதில் உதவி புரிந்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின்
பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை இரவு 9.30 மணிக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வரப்பட்ட வேளையில் 9.49 மணிக்கு முடிவுக்கு வந்தது என்று அவர்
சொன்னார்.
முன்னதாக, கட்டுப்பாட்டை இழந்த எம்.பி.வி. வாகனம் ஒன்று துரித
உணவகத்தை மோதுவதைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில்
வைரலானது.


