சிரம்பான், மே 7 - கடந்த மாதம் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் தொழிற்சாலை நடத்துநரான மருமகன் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இங்குள்ள தாமான் ரஹாங்கில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி பி. சசி குமார் (வயது 52) என்பவரை கொலை செய்ததாக வி.கார்த்தி (வயது 32 ) குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் பொறுப்பை ஏற்றிருந்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹசீலியா முகமது முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனைப் புரிந்து கொண்எதற்கு அடையாளமாக கார்த்தி தலையசைத்தார்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது மாமனாரை, மார்பில் சரமாரியாகக் குத்தி அடித்ததன் விளைவாக அவர் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் தாமான் ரஹாங்கில் இறந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டு முதல் 40 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் (மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால்) வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
துணை அரசு வழக்கறிஞர் நிக் நூர் அகிலா சியர்பா நிக் ஜைடி இந்த வழக்கை நடத்திய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் ஏ.ஆர். தமயந்தி ஆஜரானார்.


