கோலாலம்பூர், மே 6 - MATRADE எனப்படும் மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகத்திற்கு, ஐந்து கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை புதிய சந்தைக்கான விரிவாக்க முயற்சிகளை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
மலேசியா மீது அமெரிக்கா திடீரென விதித்த பரஸ்பர வரிகளைத் தொடர்ந்து, குறுகிய முதல் நடுத்தர காலத்திற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் மடாணி அரசாங்கத்தின் உத்தியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் புதிய சந்தைகளில் ஈடுபட உதவுகின்றன.
உலகளாவிய வணிகங்களையும் திறமையாளர்களையும் மலேசியாவிற்கு ஈர்க்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அன்வார் கூறினார்,
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற தேசிய முன்னுரிமைப் பகுதிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை அழைத்து வருவோம், என்றார் அவர்.
உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையால், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவதில், குறிப்பாக மேம்பாடு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அன்வார் மேலும் கூறினார்.
பெர்னாமா


