ஷா ஆலம், மே 5: கடந்த சனிக்கிழமை, போர்ட் கிள்ளான் உள்ள கடல்சார் போக்குவரத்து பயிற்சி நிறுவனத்தின் படகுத் துறையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆடவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை 8.17 மணிக்கு 29 வயதான உள்ளூர் நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் பொது மக்களளால் மீட்கப்பட்டார். ஆனால் மற்றொரு நபர் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது என அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து போர்ட் கிள்ளான் நீர் மீட்புக் குழு (பி.பி.டி.ஏ.) தேடுதல் முயற்சியைத் தொடர்ந்தது. விழுந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில், இன்று பி.பி.டி.ஏ உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என அவர் கூறினார்.


