சுங்கை பூலோ, ஏப். 30 - அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுங்கை பூலோ வட்டாரத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு 1 லட்சம் வெள்ளி மதிப்புள்ள உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பிருமான டத்தோஶ்ரீ ரமணன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பொருட்களை வழங்கினார்.
கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கம்போங் குபு காஜா பகுதி மக்களும், தஹ்ஃபிஸ் அஸாத்ரா மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமானா இக்தியார் மலேசியா வாயிலாக் இந்த உதவிகள் வழங்கப்பட்டன
150 குடும்பங்களுக்கு மின்சாரப் பொருட்கள், சமையலறைப் பொருட்களான அடுப்புகள், ரைஸ் குக்கர், மின் விசிறிகள், பாத்திரங்கள் போன்ற உதவி பொருட்கள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட தஹ்ஃபிஸ் மையத்திற்கு மாணவர்கள் தங்கள் படிப்பை மிகவும் வசதியான, வளமான சூழ்நிலையில் தொடரும் வகையில் பல உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
உதவி விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்வதில் சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்துடன் நெருக்கமான ஒத்துழைத்த டத்தோ ஷாமிர் ஹஜிஸ் தலைமையிலான அமானா இக்தியார் மலேசியாவிற்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் எல்லா நேரங்களிலும் மக்களுக்கு உதவுவதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.


