ஷா ஆலம், ஏப். 25- புஞ்சாக் ஆலமில் உள்ள வெளிநாட்டினரின் வணிக வளாகங்கள் மீதான ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எஸ்.) அந்நியப் பிரஜைகளால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்களில் நேற்று சோதனை நடத்தியது.
வெளிநாட்டினரால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வர்த்தகத்தை துடைத்தொழிக்கும் நோக்கிலான இந்நடவடிக்கையை மலேசிய நிறுவன ஆணையத்துடன் (எஸ்.எஸ் எம்.) இணைந்து தாங்கள் ளேற்கொண்டதாக எம்.பி.கே.எஸ். தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
வங்காளதேசிகளால் நடத்தப்படும் இரண்டு பல்பொருள் அங்காடிகள் கடைகள் மீது எம்.பி.கே.எஸ். அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து, அவற்றின் வணிக உரிமங்களை பறிமுதல் செய்தோடு வர்த்தகத்தை நிறுத்தும் நோட்டீஸ்களையும் வெளியிட்டது.
மேலும், உரிமம் இல்லாமல் வர்த்தகம் செய்த குற்றத்திற்காக மியான்மர் நாட்டவரால் நடத்தப்படும் சில்லறை வணிக வளாகத்திற்கு சம்மன் வழங்கப்பப்பட்டது. அதோடு அதன் வணிக உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது என்று அது கூறியது.
அதே நடவடிக்கையில், உணவு தயாரிக்கும் மற்றும் கையாளும் பகுதிகளின் தூய்மையைப் பராமரிக்கத் தவறிய குற்றத்திற்காக ஓர் உணவு விற்பனை வளாகத்திற்கு இரண்டு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் நிர்ணயிக்கப்பட்ட உரிம நிபந்தனைகளுக்கு இணங்க சுத்தமான, ஒழுங்கான வணிகச் சூழலை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று எம்.பி.கே.எஸ். தெரிவித்தது.


