குவாந்தான், ஏப்ரல் 24 - பகாங்கில் நில வரி செலுத்தத் தவறிய உரிமையாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்னர், நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்த நில உரிமையாளருக்கு முன்னதாக நோட்டிஸ் வழங்கப்படும் என்று பகாங் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
மேலும், இதுவரை பகாங் மாநிலம் முழுவதிலும் நில நிர்வகிப்பு தரப்பு, 1,082 நில உரிமையாளர்களின் உரிமையை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வசூலிக்கப்பட்ட அதன் அபராத மதிப்பு 14 லட்சத்திற்கும் அதிகமாகும் என்று அவர் கூறினார்.
"சட்டவிரோதமாக நிலத்தை பயன்படுத்துவது மட்டுமின்றி, நில வரி செலுத்தாவிட்டால் நிலத்தை பறிக்க சட்டத்தில் இடமுண்டு. அவர்கள் நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்தாவிட்டால், BA செயல்முறையைப் பின்பற்றுவோம்', என்று வான் ரொஸ்டி கூறினார்.
விஸ்மா ஸ்ரீ பகாங்கில் நடைபெற்ற பகாங் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ வான் ரொஸ்டி இவ்வாறு குறிப்பிட்டார்.
நில வரி செலுத்தத் தவறியதன் காரணமாக நில உரிமை முடக்கம் செய்யப்பட்ட, திரும்ப வழங்கப்படாத சொத்துக்களின் எண்ணிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ஃபட்சிலி முஹமட் ரம்லி எழுப்பியக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா


