கோலாலம்பூர், ஏப்ரல் 23 - முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை கையூட்டு மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் குறித்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையிலான வாக்குமூலப் பதிவிற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) நாளை அழைக்கவுள்ளது.
2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 36 உட்பிரிவு ஒன்றின் கீழ் அந்த முன்னாள் பிரதமர் தமது சொத்துகளை அறிவித்தது தொடர்பில் இம்முறை வாக்குமூலப் பதிவு மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற அதிகாரிகளுக்கான 11-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
2021-ஆம் ஆண்டு ஆகஸ் மாதம் தொடங்கி 2022-ஆம் ஆண்டு நவம்பர் வரை பதவியில் இருந்தபோது மலேசியக் குடும்பத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கான செலவு உட்பட நிதி பெற்றது தொடர்பில் கையூட்டு மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கு குறித்து, பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக டான் ஸ்ரீ அசாம் கூறினார்.
2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் மற்றும் 2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் எதிர்ப்பு சட்டம், ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-பெர்னாமா


