கோம்பாக், ஏப். 18 - இம்மாதம் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட தொழில்நுட்ப விசாரணை அறிக்கை அடுத்த வாரத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளின் மூலம் வெடிப்புக்குள்ளான எரிவாயுக் குழாயைக் கண்டுபிடிப்பதில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
போலீஸ்படை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் வேலையிட பாதுகாப்பு சுகாதாரத் துறை ஆகியவை சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கினார்.
மண்ணைத் தோண்டும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. வெடிப்புக்குள்ளான குழாயைக் கண்டுபிடித்துவிட்டோம். இன்னும் ஒரு வாரத்தில் பூர்வாங்க அறிக்கைக்காகக் காத்திருங்கள். அலட்சியம் அல்லது சதிநாசச் செயல் அடிப்படையில் போலீஸ் விசாரணை இன்னும் தொடர்கிறது என்று அவர் கூறினார்.
இன்று மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா தலைமையில் நடைபெற்ற பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் காவல் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் மற்றும் தேசிய காவல்துறை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் உள்ள பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் இம்மாதம் 1ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதனால் தீப்பிழம்பு 30 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு எழுந்தது. தீயை அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.


