பாலிக் பூலாவ், ஏப். 18 - தெலுக் கும்பாரில் உள்ள ஹோம் ஸ்தேய்
எனப்படும் தினசரி வாடகை குடியிருப்பின் நீச்சல் குளத்தில் இரண்டு
வயது எட்டு மாதச் சிறுவன் மூழ்கி மாண்டான்.
மூவர் கொண்ட குடும்பத்தில் இளையவனான அந்த பாலகன்
சுயநினைவற்ற நிலையில் நீச்சல் குளத்தில் மிதப்பதை நேற்று முன்தினம்
இரவு 10.38 மணியளவில் கண்ட அவனது தந்தை உடனடியாக
ஆம்புலன்சை தொடர்பு கொண்டதாகப் பாராட் டாயா மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி சஸாலி ஆடாம் கூறினார்.
பாலிக் பூலாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன்
கிகிச்சை பலனின்றி இரவு 11.40 மணியளவில் உயிரிழந்ததாக அவர்
சொன்னார்.
நண்பரைச் சந்திப்பதற்காக தனது மூன்று பிள்ளைகளுடன் 46 வயதான
தந்தை அந்த குடியிருப்பு வந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளதாகக் கூறிய அவர், எனினும், வேலை காரணமாக
அப்பிள்ளைகளின் தாயார் உடன்வரவில்லை என்றார்.
தனது மகன் காணப்படாததை இரவு 10.15 மணியளவில் உணர்ந்த அவனது
தந்தை தன் நண்பருடன் வீட்டைச் சுற்றித் தேடியுள்ளார். அப்போது
அச்சிறுவன் சுயநினைவற்ற நிலையில் நீரில் மிதப்பதை கண்டுள்ளார்
என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
நீரில் மூழ்கியதால் அச்சிறுவனுக்கு மரணம் ஏற்பட்டது
சவப்பரிசோதனையில் தெரிய வந்ததாக தெரிவித்த சஸாலி, இந்த
சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது பிரிவின்
கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


