சிப்பாங், ஏப்ரல் 17 - ஆசியான் உச்சநிலை மாநாடு எதிர்வரும் மே மற்றும் அக்டோபரில் நடைபெறுவதை முன்னிட்டு பொது சேவை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதும், P-d-P-R எனப்படும் இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் நடவடிக்கை செயல்படுத்துவது குறித்தும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமாட் ஹசான் பரிந்துரைப்பார்.
கிள்ளான் பள்ளாத்தாக்கு பகுதிகளில், சாலைகள் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து சிக்கலைத் தொடர்ந்து, இப்பரிந்துரையை அமைச்சரவையின் சுவனத்திற்குக் கொண்டு செல்லவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும். இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள், என்றார் அவர்.
சீனா அதிபர் ஜி ஜின்பெங் மலேசியாவிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டதை முன்னிட்டு, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள பல சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து சிக்கலை எதிர்நோக்கிய மக்களிடம் அவர் மன்னிப்புக் கோரினார்.
பெர்னாமா


