கோலாலம்பூர், ஏப்ரல் 17 - உள்ளூர் சீன நாளிதழின் முதல் பக்கத்தில் சித்திர வடிவில் வெளியான தேசியக் கொடியில் உள்ள தவறு, ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று என மாமன்னர் தெரிவித்தார்.
ஜாலூர் கெமிலாங் என்பது வெறும் துணியல்ல; மாறாக சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாகும். மேலும், அக்கொடி நாடு மற்றும் நாட்டு மக்களின் இறையாண்மையின் சின்னமாக விளங்குவதாக அவர் கூறினார்.
இந்த தவறு `Sin Chew Daily` நாளிதழில் நடந்திருக்கக் கூடாது. அதன் நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் அதிக கவனத்தோடு செயல்பட்டிருக்கு வேண்டும் என மாமன்னர் சுட்டிக் காட்டினார்.
நேற்று தனது செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிட்ட கார்ட்டூன் சித்திரத்தில் பிறை நிலவு இல்லாமல் தேசியக் கொடியைத் தவறாக வெளியிட்டு Sin Chew Daily நாளிதழ் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
அதற்கு வருத்தம் தெரிவித்த அந்நிறுவனம், அந்தத் தொழில்நுட்ப தவறு' உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், திருத்தப்பட்ட படம் இன்றைய பதிப்பில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது.
இருப்பினும், அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


