கோலாலம்பூர், ஏப். 16 - சபா மாநிலத்தில் வெள்ளம் காரணமாக தற்காலிக
நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை இன்று காலை
அதிகரித்துள்ள வேளையில் ஜோகூரில் நிலைமையில் எந்த மாற்றமும்
இல்லை.
சபா மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 75 குடும்பங்களைச் சேர்ந்த
228 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நேற்று இந்த
எண்ணிக்கை 67 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேராக இருந்தது.
மொத்தம் 54 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் பியூபோர்டில் உள்ள துயர்
துடைப்பு மையத்திலும் 21 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் கெனிங்காவில்
உள்ள நிவாரண மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சபா மாநில
பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.
இம்மாநிலத்திலுள்ள பியூபோர்ட் மற்றும் கெனிங்காவ் மாவட்டங்களில்
உள்ள எட்டு கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த
செயல்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதனிடையே, ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட்டில் 17 குடும்பங்களைச்
சேர்ந்த 56 பேர் இன்னும் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
கம்போங் பத்து பாடாக் பாலாய் ராயாவில் 41 பேரும் கம்போங் செபராங்
பத்து பாடாக் மற்றும் கம்போங் பத்து 5, ஜாலான் மூவார் கிராமங்களைச்
சேர்ந்த 15 பேர் கம்போங் தாசேக் சமூக மண்டபத்திலும் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
மூவார் ஆற்றின் சிகாமாட் பகுதியிலும் கம்போங் தெக்காம் படகுத் துறை,
பூலோ காசாப் ஆகிய பகுதிகளிலும் ஆற்றின் நீர் மட்டம் எச்சரிக்கை
அளவில் உள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர்
டான்ஸ்ரீ அஸ்மி ரோஹானி அறிக்கை ஒன்றில் கூறினார்.


